Monday 19 August 2013

வறுமை கணக்கீடே ஒரு வளமான தொழில்

இப்படி ஒரு கூர்மையான கமென்ட் பொருளாதார நிபுணர் வாயில் வருவது நம்மை அதிர்ச்சி அடையச் செய்கிறது. சபாஷ் உத்சா பட்நாயக்! என்று சொல்லத் தோன்றுகிறது.

அவரின் "பீப்பில்ஸ் டெமாக்ரசி" (ஆகஸ்ட் 5-11, 2013) - எகனாமிக் நோட்ஸ் கட்டுரைதான் இப்படித் துவங்குகிறது. வளர்முக நாடுகளில் வறுமைக் கணக்கீடுகளைச் செய்வதற்கும், பன்னாட்டு நிறுவனங்களில் இது குறித்து பணியாற்றுவதற்கும்  நூற்றுக்கணக்கான பொருளாதார நிபுணர்களுக்கு அரச சம்பளம் கிடைக்கிறது என்ற உண்மையை உடைக்கிறது.

வறட்சியும், வேலையின்மையும் நிறைந்த 2010-12 ல் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் நகரங்களில் 7 சதவீதமும் (20 லிருந்து 13 சதவீதம்) கிராமங்களில் 8 சதவீதமும் ( 33 லிருந்து 25 சதவீதம் ) குறைந்துள்ளது என்றால் நம்ப முடியுமா! திட்டக் கமிசன் வைக்கிற அளவுகோலான நகரத்திற்கு ஒரு நாளுக்கு ரூ 33 கிராமத்திற்கு ரூ 27 ஐ என்பது தவறான மதிப்பீடு என்று  தெரிந்தும்  பிடிவாதமாக தொடர்கிறது என்கிறார் உத்சா பட்நாய்க். இதே போன்ற அளவுகோலைத் தொடர்ந்தால் 2014-15 ல் நகர வறுமைக் கோடு ஜீரோவை தொட்டுவிட்டதாக அறிவிக்கப்படும் என்று எச்சரிக்கிறார். கிராமப் புற வறுமையும் 12% க்கு சரிந்துவிட்டதாக அரசு சொல்லுமென்றும் கணிக்கிறார். 

கிராமப்புற உணவு நுகர்வு 2200 கலோரி- நகர்ப்புறத்திற்கு 2100 கலோரி என்ற அறிவியல் பூர்வமான, பொதுவாக ஏற்றும் கொள்ளப்பட்டுள்ள அளவுகோலை கொண்டால் 75 சதவீத கிராமத்தவர்களுக்கும், 73 சதவீத நகரத்தவர்களுக்கும் அது கிடைக்கவில்லை என்பதே உண்மை. 2005 ல் இதே சதவீதங்கள் 70 மற்றும் 65 ஆக இருந்தன. வறுமை கூடியுள்ளதா? குறைந்துள்ளதா?

டெல்லியில் வறுமைக் கோட்டிற்கான மாதச் செலவினம்  2010 ல் ரூ 1040 என அரசால் சொல்லப்பட்டது. இதைக் கொண்டு 1400 கலோரி உணவையே நுகர முடியும். ரூ 5000 மாதச்  செலவினம்  செய்தால்தான் ரூ 2100 கலோரி உணவை நுகர முடியும் என்பதே உண்மை.

இப்படி நிறைய தகவல்களைத் தருகிறது இக்கட்டுரை. அரச சம்பளத்தை துறந்து மக்களுக்காக சிந்திக்கிற பொருளாதார  நிபுணர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் உத்சா  பட்நாயக்.

No comments:

Post a Comment