Thursday 29 August 2013

ஈழத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் உறவு

என்.சி.பி.எச் வெளியீடு- 32 பக்கங்களில் ரூ 15 க்கு கிடைக்கிறது. இலங்கை மூத்த தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி வரலாற்று ரீதியாக இலங்கையில் முஸ்லிம்கள்-தமிழர்களுக்கு இடையிலான உறவு நிலை பற்றி எழுதியுள்ள கட்டுரை.

1885 ல் இலங்கைச் சட்ட மேலவையில் பொன்னம்பலம் ராமநாதன் ஆற்றிய உரை "தேசியத்தால் தமிழர்... சமயத்தால் முஸ்லிம்" என்று செய்த வரையறை சர்ச்சைக்கு ஆளானதில் துவங்கி எல்.டி.டி.இயின் துவக்க காலம் வரை ஏற்பட்ட பல்வேறு நிகழ்ச்சிப் போக்குகள்- அதன் தாக்கங்கள் நூலில் இடம் பெற்றுள்ளது. 

" மொழி விவகாரம்" மெல்ல மெல்ல இனப்பகைமையாக மாறிய போது நாட்டில் உள்ள இரண்டாவது , பெரிய சிறுபான்மைக் குழுவின் நிலைப் பாடானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது" 

என்று இஸ்லாமியார்க்குள்ள அரசியல் முக்கியத்துவத்தை சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.

மன்னார் மாவட்டத்தில் 27 சதவீதம் இஸ்லாமியர்கள். மட்டக் களப்பில் 24 சதவீதம், திருகோண மலையில் 29 சதவீதம். அம்பாறை மாவட்டத்திலோ 42 சதவீதம் என்ற தகவல்களும் இலங்கைப் பிரச்சினையில் இஸ்லாமியர்களின் கருத்துக்குள்ள தாக்கத்தை உணர்த்துகின்றன.



சிங்கள அரசியல் கட்சிகள்  தமிழருக்கு எதிரான கருவியாக முஸ்லிம்களை பயன்படுத்தின  என்பதைக்  குறிப்பிடுகிறார்.

தமிழ்ப் போராளிகள் இஸ்லாமியர் பகுதியில் கட்டாய  நிதி சேகரிப்பு செய்ததும், தராதவர்களின் குடும்ப உறுப்பினர்களை கடத்தி கொண்டு போய் விடுவோமென்பது  போன்ற மிரட்டல்கள் எவ்வாறு அவர்களை விலகிப் போய்ச் செய்தது என்பது பற்றிய பதிவுகள் நூலில் உள்ளன. 
தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி,  அரசுடன் மாகாணப் பிரிவினை பற்றி பேசியபோது கிழக்கு மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கிற அம்பாறை மாவட்டத்தை இணைக்காமல் கோரிக்கை வைத்தது தூரத்தை அதிகமாக்கியதாக சுட்டுகிறார்.

சிங்களம் என்பது சிங்கள- பௌத்தமாகவும், சைவ - தமிழ் கருத்து நிலையே தமிழர் ஒருமை நிலையாக பரிணமித்ததும் இயல்பாகவே தங்களின் மத அடையாளத்தை தக்க வைப்பதை நோக்கி இஸ்லாமியரைத் தள்ளியதையும் விவரிக்கிறார்.

இது எழுதப்பட்ட காலம் பற்றிய குறிப்பு இல்லை. எனினும் தகவல்களை வைத்து பார்க்கும்போது 1990 களில் எழுதப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆகவே கருத்துக்களில் சார்பு நிலை பற்றிய பிரச்சினை அதிகம் தென்படவில்லை.

இன்னும் ஆழமான கருத்துக்கள்  இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment