Monday 19 August 2013

பிரேசில் - போராட்டங்கள் ஏன் ?

"ஜூன்" மாதம் துவக்கத்தில் இருந்து ஒர்க்கர்ஸ் பார்ட்டி ஆட்சி செய்கின்ற பிரேசிலில் நடைபெற்று தற்போது முடிந்துள்ள போராட்டங்கள் உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆர். அருண்குமார், "பீப்பில்ஸ் டெமாக்ரசி" ஆகஸ்ட் 5-11 இதழில் எழுதியுள்ள கட்டுரை நம் மனதில் எழும் கேள்விகளுக்கு விடை தருகிறது.

2003 ல் பதவிக்கு வந்த லூலா அரசாங்கம் அமலாக்கிய எங்கள் வீடு.. எங்கள் இல்லம் என்கிற ஏழைகளுக்கான திட்டம் நிறைய பேருக்கு குடியிருப்பை தந்துள்ளது. ஆனால் அப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. பொது போக்குவரத்து இல்லை. பொதுச் சேவைகள் கிடைப்பதில் குறைபாடுகள் உள்ளன. மக்களிடம் உள்ள பெரும் எதிர்பார்ப்புகளுக்கு அரசு ஈடு கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் லூலா எடுத்த பொருளாதார நடவடிக்கைகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கையை 37.5% லிருந்து 20.9% க்கும், அதீத வறுமைக் கோட்டை 13.2% லிருந்து 6% க்கும் குறைத்துள்ளன. நடுத்தர வர்க்கம் 38% லிருந்து 53 % ஆக உயர்ந்துள்ளது.

லூலா அரசுக்கு மேலவையில் (SENATE) பெரும்பான்மை இல்லை. கீழவையில் (CONGRESS) மிகச்சிறு பெரும்பான்மையே உள்ளது. பல கவர்னர்கள், பிராந்திய அரசாங்கங்கள்,மேயர்கள்  எதிர்க் கட்சிகளிடம் உள்ளதால் லூலா அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தடுக்கப்படுகின்றன. 

ஆனால் இதற்கான கோபத்தையெல்லாம் லூலா அரசின் மீது திருப்பிவிட ஊடகங்கள் பெரும் முயற்சி செய்கின்றன. அரசின் பதில்கள் மக்களுக்கு போய்ச் சேருவதில்லை. 

விளையாட்டை நேசிக்கும் பிரேசிலில் 2014ல் நடைபெறவுள்ள உலக கால்பந்து போட்டி, 2016 ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் எல்லாம் "வீண் செலவுகள்" என்று எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கூப்பாடு போடுகின்றன. இப்போட்டிகள்  36 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாகும்; கல்விக்கும்-உடல் நலத்திற்கும் செய்யப்பட்ட ஒதுக்கீடுகள் வெட்டப்படாது என்கிற   அரசின் விளக்கங்களை ஊடகங்கள் மறைக்கின்றன.  

ஆனால் ஆளுங்கட்சியும் ( PT- WORKERS PARTY ) போராட்டத்தின் பின்பலமாக 
உள்ள மக்களின் எதிர்பார்ப்புகளை அங்கீகரிப்பது வித்தியாசமும், பக்குவமுமான அணுகுமுறை ஆகும். ஆளுங்கட்சியின் தலைவி

"வீதிகளில் வெளிப்படுகிற வீரியம் மிக்க உணர்வுகள் இன்னும் பல மாற்றங்களையும், பயன்களையும் பிரேசில் மக்களுக்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படவேண்டும் . இத்தகைய வெளிப்பாடுகள் நமது ஜனநாயகத்தின் வலிமையைக் காட்டுபவை; பிரேசிலை முன்னெடுத்துச் செல்வதற்கான இளைஞர்களின் வேட்கையை உணர்த்துபவை" 

என்று தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டார்.

அரசில் அங்கம் வகிக்கிற கம்யுனிஸ்ட் கட்சியும் போராட்டங்களை ஆதரித்ததோடு கல்விக்கான ஒதுக்கீட்டை 10 % க்கு உயர்த்துமாறும், ஏற்றத் தாழ்வுகளை குறைக்க விரைந்து செயலாற்றுமாறும், கார்பரேட்டுகள் மீது கூடுதல் வரி விதிக்குமாறும் கோரியுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புகளை வலதுசாரி சக்திகளும், வசதி படைத்தோர் கைகளில் உள்ள ஊடகங்களும் பயன்படுத்தி அரசியல் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment