Saturday 17 August 2013

குறைந்தபட்சக் கூலி என்ன ?

தீக்கதிர் ஆகஸ்ட் 18-2013 இதழில் கே.ஆர். கணேசன் உள்ளாட்சி ஊழியர் கோரிக்கைகளை பற்றி எழுதியுள்ள கட்டுரை. தொழிலாளரின் பொருளாதாரக் கொள்கைகளை விரிந்த பார்வையோடு எப்படி விவரிக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது. சில பொதுவான தகவல்களும் கிடைக்கின்றன.

* துப்புரவு பணியிலும், குடிநீர் வழங்கலிலும் 1 லட்சம் பேர் பகுதிநேர ஊழியர்களாக தமிழக உள்ளாட்சிகளில் பணி  புரிகிறார்கள். ரூ 700 முதல் ரூ 1400 வரை சம்பளம் பெறுவதே பல ஊராட்சிகளில் நிலை. நிர்ணயிக்கப்பட்ட தொகுப்பூதியம் வழங்குகிற உள்ளாட்சிகளில் குடிநீர் பணிகளுக்கு ரூ 2400, துப்புரவு பணிகளுக்கு ரூ 3600 தரப்படுகிறது.

1948 ல்  குறைந்தபட்ச கூலி சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1957 ல் 15வது முத்தரப்பு மாநாடு 2700 கலோரி என்கிற டாக்டர் அக்ராய்டு பார்முலாவை ஏற்றுக்கொண்டு கணவர், துணைவியார், 2 குழந்தைகள் ஆகியோர் கொண்ட குடும்பத்தை 3 யூனிட்டுகள் என வரையறுத்தது. 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு
அரிசி-14 அவுன்ஸ், பால்,பால் பொருட்கள் - 10 அவுன்ஸ், கீரை கிழங்குகள்  - 7 அவுன்ஸ்,துவரம்பருப்பு ,உருளைக் கிழங்கு, பழம் - தலா 3 அவுன்ஸ்,இறைச்சி- 2அவுன்ஸ், மீன்,முட்டை, சர்க்கரை, நல்லெண்ணெய் - தலா 1 அவுன்ஸ், ஒரு நபருக்கு ஆண்டுக்கு 18 கெஜம் துணி வீதம் 4 பேருக்கு 72 கெஜம், எரிபொருள், மின்சாரம், வீடு வாடகை 20 சதவீதம் என்கிற கணக்கில் நாள் ஒன்றுக்கு ரூ 57 -மாதம் ரூ 1650 என தீர்மானிக்கப்பட்டது. 2003 ல் இது நாள் ஒன்றுக்கு ரூ 182.30 மாதத்திற்கு ரூ 5649 என உயர்த்தப்பட்டது. இன்றைய விலைவாசியில் நாள் ஒன்றுக்கு ரூ 400 வீதம் மாதம் ரூ 12000 வழங்கப்பட வேண்டும் என்பதே கணக்கு. ஆனால் தமிழக சட்டமன்றத்தில் ரூ 2000 சம்பளத்தில் சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதற்கு என்ன அடிப்படை ? என்ன நியாயம் ? 
கட்டுரையாளர் கே.ஆர்.கணேசன் கேள்வி நியாயத்தை கூர்மையாக முன்வைக்கிறது.

* தமிழகத்தில் 12524 ஊராட்சிகளில் 79,394 குக்கிராமங்கள் உள்ளன. 23 சதவீத  ஊராட்சிகளில் மட்டுமே சொந்த நிதி ஆதார வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் 10 சதவீத நிதியே மாநில அரசால் உள்ளாட்சிகளுக்கு தரப்படுகிறது. இது கேரளாவில் இது 40 சதவீதம். மேற்கு வங்காளத்தில் 35 சதவீதம். கர்நாடகாவில் 30 சதவீதம். ஊராட்சிகள் எங்கே போகும்? குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலை, வரி வசூல் செய்கிற ஊழியர்களுக்கு சம்பளம்.. இதெற்கெல்லாம் என்ன செய்வது ? 

இப்படி அதிகாரப்பரவல், கிராம வளர்ச்சியோடு உள்ளாட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை கட்டுரையாளர் இணைக்கிறார். 

ரூ 10000 என்ற அளவிலாது குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கவேண்டும் என்று முடிகிற அவர் கட்டுரை தாராளமயம்- "வளர்ச்சி"- ருபாய் மதிப்பு வீழ்ச்சி- அந்நிய முதலீடு ஊக்குவிப்பு  ஆகியன பற்றிய விமர்சனங்களையும்  தொட்டுள்ளது .

No comments:

Post a Comment