Showing posts with label GLOBALIZATION. Show all posts
Showing posts with label GLOBALIZATION. Show all posts

Monday, 19 August 2013

வழுக்கு மரம்


விவசாயியின் வாழ்க்கையை வேறு எப்படி வர்ணிப்பது?

செங்கோட்டையில் ஆகஸ்ட் 15 அன்று கொடியேற்றிய பிரதமர் மன்மோகன் சிங் "கடந்த ஒன்பது  ஆண்டுகளில்தான் அதிக தடவை விவசாயிகளின் விளைபொருட்களுக்கான ஆதரவு விலை ஏற்றப்பட்டுள்ளது" என்று பெருமைபட்டுக் கொண்டார். பீப்பில்ஸ் டெமாக்ரசி -ஆகஸ்ட் 12-18, இதழ் தலையங்கம் இது பற்றி ராஜ்ய சபாவில் விவசாய அமைச்சர் நவம்பர் 30,2012 அன்று அளித்த பதில் ஒன்றையே பதிலாக தந்துள்ளது.

விவசாய செலவினங்கள் மற்றும் விலைகள் ஆணையம் தருகிற தகவல்படி  2010-12 க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் ஒரு குவிண்டால் (100 கிலோ) நெல் உற்பத்திச் செலவினம் ரூ 146 கூடியுள்ளபோது அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலையோ ரூ 80 மட்டுமே கூடியுள்ளது. கோதுமைக்கு செலவினம் 2011-13 க்கு இடைப்பட்ட காலத்தில் குவிண்டால்  ரூ 171 கூடியிருக்கும் போது ஆதரவு விலையோ ரூ 65 தான் அதிகரித்துள்ளது.

உணவு பாதுகாப்பு, வறுமை, அந்நிய முதலீடு பற்றிய பிரதமரின் கருத்துக்கள் பற்றியும் இத் தலையங்கம் ஆழமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

பிரேசில் - போராட்டங்கள் ஏன் ?

"ஜூன்" மாதம் துவக்கத்தில் இருந்து ஒர்க்கர்ஸ் பார்ட்டி ஆட்சி செய்கின்ற பிரேசிலில் நடைபெற்று தற்போது முடிந்துள்ள போராட்டங்கள் உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆர். அருண்குமார், "பீப்பில்ஸ் டெமாக்ரசி" ஆகஸ்ட் 5-11 இதழில் எழுதியுள்ள கட்டுரை நம் மனதில் எழும் கேள்விகளுக்கு விடை தருகிறது.

2003 ல் பதவிக்கு வந்த லூலா அரசாங்கம் அமலாக்கிய எங்கள் வீடு.. எங்கள் இல்லம் என்கிற ஏழைகளுக்கான திட்டம் நிறைய பேருக்கு குடியிருப்பை தந்துள்ளது. ஆனால் அப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. பொது போக்குவரத்து இல்லை. பொதுச் சேவைகள் கிடைப்பதில் குறைபாடுகள் உள்ளன. மக்களிடம் உள்ள பெரும் எதிர்பார்ப்புகளுக்கு அரசு ஈடு கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் லூலா எடுத்த பொருளாதார நடவடிக்கைகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கையை 37.5% லிருந்து 20.9% க்கும், அதீத வறுமைக் கோட்டை 13.2% லிருந்து 6% க்கும் குறைத்துள்ளன. நடுத்தர வர்க்கம் 38% லிருந்து 53 % ஆக உயர்ந்துள்ளது.

லூலா அரசுக்கு மேலவையில் (SENATE) பெரும்பான்மை இல்லை. கீழவையில் (CONGRESS) மிகச்சிறு பெரும்பான்மையே உள்ளது. பல கவர்னர்கள், பிராந்திய அரசாங்கங்கள்,மேயர்கள்  எதிர்க் கட்சிகளிடம் உள்ளதால் லூலா அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தடுக்கப்படுகின்றன. 

ஆனால் இதற்கான கோபத்தையெல்லாம் லூலா அரசின் மீது திருப்பிவிட ஊடகங்கள் பெரும் முயற்சி செய்கின்றன. அரசின் பதில்கள் மக்களுக்கு போய்ச் சேருவதில்லை. 

விளையாட்டை நேசிக்கும் பிரேசிலில் 2014ல் நடைபெறவுள்ள உலக கால்பந்து போட்டி, 2016 ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் எல்லாம் "வீண் செலவுகள்" என்று எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கூப்பாடு போடுகின்றன. இப்போட்டிகள்  36 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாகும்; கல்விக்கும்-உடல் நலத்திற்கும் செய்யப்பட்ட ஒதுக்கீடுகள் வெட்டப்படாது என்கிற   அரசின் விளக்கங்களை ஊடகங்கள் மறைக்கின்றன.  

ஆனால் ஆளுங்கட்சியும் ( PT- WORKERS PARTY ) போராட்டத்தின் பின்பலமாக 
உள்ள மக்களின் எதிர்பார்ப்புகளை அங்கீகரிப்பது வித்தியாசமும், பக்குவமுமான அணுகுமுறை ஆகும். ஆளுங்கட்சியின் தலைவி

"வீதிகளில் வெளிப்படுகிற வீரியம் மிக்க உணர்வுகள் இன்னும் பல மாற்றங்களையும், பயன்களையும் பிரேசில் மக்களுக்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படவேண்டும் . இத்தகைய வெளிப்பாடுகள் நமது ஜனநாயகத்தின் வலிமையைக் காட்டுபவை; பிரேசிலை முன்னெடுத்துச் செல்வதற்கான இளைஞர்களின் வேட்கையை உணர்த்துபவை" 

என்று தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டார்.

அரசில் அங்கம் வகிக்கிற கம்யுனிஸ்ட் கட்சியும் போராட்டங்களை ஆதரித்ததோடு கல்விக்கான ஒதுக்கீட்டை 10 % க்கு உயர்த்துமாறும், ஏற்றத் தாழ்வுகளை குறைக்க விரைந்து செயலாற்றுமாறும், கார்பரேட்டுகள் மீது கூடுதல் வரி விதிக்குமாறும் கோரியுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புகளை வலதுசாரி சக்திகளும், வசதி படைத்தோர் கைகளில் உள்ள ஊடகங்களும் பயன்படுத்தி அரசியல் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

Sunday, 18 August 2013

போரில் மேய்ந்த மாடு

"போரில் மேய்ந்த மாட்டிற்கு புடுங்கிப்போட்டால் கட்டுப்படியாகாது" - ரேகா ( மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் ) அமலாக்கம் பற்றிய ஜி.மணி அவர்களின் ( மாநில பொதுச் செயலாளர் , தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம்) தீக்கதிர் ( 17.8.2013) கட்டுரையில் அதில் நடைபெறுகிற முறைகேடுகளை விளக்குவதற்காக கூறப்பட்டுள்ள பழமொழி.

விதி மீறல்களை பற்றி விவரிக்கிற கட்டுரை , கறாராக அமலாக்கப்படும் ஒரு விதி பற்றி எடுத்துரைத்துள்ளது.

- ஒரு நாளைக்கு 42 கன அடி மண்ணை வெட்டிக் கொட்ட வேண்டும். அதாவது இரண்டு டன் அளவு மண்ணை தோண்டி எடுத்துப் போடவேண்டும். ரேகா திட்டத்தில் வேலைக்கு வருபவர்களில் 85% பேர் பெண்கள். இந்தியப் பெண்களில் 55% பேர் இரத்த  சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தேசிய குடும்ப நல ஆய்வு தந்துள்ள தகவல்.இவர்கள் 8 மணி நேரம் வெயிலில் நின்று 2 டன் மண்ணை தோண்டுவது என்றால் முடியுமா ! குறைவாகத் தோண்டினால் கூலி ரூ 30, ரூ 40 எனக் குறைந்துவிடுகிறது. இதை வைத்து எதை வாங்குவது, எதை சாப்பிடுவது என்று திண்டாடுகிறார்கள்-

இந்தக் கட்டுரையின் இறுதி பகுதியில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகளில் ஒன்று வேலை அளவை 24 கன அடியாகக் குறைத்திடு! என்பதாகும்.



Saturday, 17 August 2013

டாலர் பாம்பும்- ருபாய் வீழ்ச்சியும்

பரமபத விளையாட்டை உதாரணமாகக் கொண்டு  இத்தலைப்பை ருபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றிய தனது "காப்பீட்டு ஊழியர் "-ஆகஸ்ட் 2013 இதழ் கட்டுரைக்கு வெ.ரமேஷ் தந்துள்ளார்.

அதில் சுவாரஸ்யமான விவரங்கள் தரப்பட்டுள்ளன. இன்று ஒரு டாலருக்கு ரூ 61.65  ஆக உள்ள ருபாய் இன்னும் சரியுமோ என்ற அச்சத்தை தந்து கொண்டிருக்கிறது. 1990 ல் கூட ரூ 17 ஆக இருந்துள்ளது. யோசித்து பாருங்கள். 1 டாலருக்கு 1 ருபாய் என்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். 1947 ல் இப்படித்தான் இருந்திருக்கிறது என்று அக்கட்டுரை கூறுகிறது. இன்னும் பின்னால் போனால் ஒரு டாலருக்கு 10 பைசா ( 1925 ல்) 8 பைசா (1913) என்று கூட இருந்திருக்கிறது.  

காச நோய்... கவலைப்படுகிறதா அரசு ?



இந்து  16.8.2013 நாளிதழின் நடுப்பக்க கட்டுரை - அரசு காச நோய் கட்டுப்பாடு திட்டம் பற்றியது- டி. ஜேக்கப் ஜான் , முன்னாள் அகில இந்தியத் தலைவர், இந்திய குழந்தை மருத்துவர் கழகம்- அதில் உள்ள இரண்டு  தகவல்கள்:

1 ) உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் உள்ள இந்தியாவில் உலகக் காச நோயாளிகளில் 26 பேர் உள்ளனர்.

2) இந்திய பொருளாதாரத்திற்கு காச நோய் காரணமாக ஏற்படும் இழப்பு 23.7 பில்லியன் டாலர்கள். (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 142200 கோடிகள்). ஆனால் அரசின் புதிய தேசிய காச நோய் கட்டுப்பாடு திட்டத்திற்கான  ( REVISED NATIONAL TB CONTROL PROGRAMME- RNTCP) செலவினம் 200 மில்லியன் டாலர் மட்டுமே. அதாவது இந்திய ருபாய் மதிப்பில் ரூ 1200 கோடிதான்.

வங்கிகளின் எதிர்காலத்தை 30 பேர் சீரழிப்பதா?

இந்து 16.8.2013 இதழின் முதல் பக்க செய்தியொன்றில்  வாராக்கடன்கள் காரணமாக பொதுத்துறை வங்கிகள் சந்தித்துள்ள இழப்புகள் குறித்து சி.பி.ஐ விசாரணை துவங்கியிருப்பதை செய்தியாளர் தேவேஷ் கே. பாண்டே தெரிவித்துள்ளார்.

அதில் மறுசீரமைக்கப்பட்ட கடன்களின் மதிப்பு ஐந்து லட்சம் கோடியை தொட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இத்தொகை 2 லட்சம் கோடிகளாக இருந்தது. மொத்த கடன்களில் 31.3.2009 ல் 4.87 சதவீதமாக இருந்த மறுசீரமைக்கப்பட்ட கடன்கள் 31.3.2012 ல் 8.24 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்தகைய கடன்களில்தான் மிகப்பெரும் தொழிலதிபர்கள் புகுந்து விளையாடியிருப்பதாக புகார். 

அண்மையில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாராக்கடன் வைத்துள்ள முதல் பெரிய 30 கணக்குகளை நெருக்கி வசூலித்தாலே அவ்வங்கிகளின் பாலன்ஸ் ஷீட்டுகளை தேற்றிவிடலாம் என்றார்.  30 பேர் வங்கிகளின் எதிர்காலத்தையே சீரழிக்க முடியுமென்றால் இவ்வளவு நாள் வேடிக்கை பார்த்தவர்களை என்ன செய்வது !